கவிதையின் வழி..
என் கண்மணி வா!
என் கண்மணி வா! என்றேன்
வந்தாய்...
ஓடி வா!..ஓடிவா! என்றேன்
களிற்றுக்குழவி போல்
ஓடி வந்தாய்.
உன்னைக் கட்டி அணைத்து
முத்தம் சொரிந்து
பட்டுக் கன்னத்தில்
மெல்லப் பதிந்து
செல்லமே, உயிரே
என்று மூர்ச்சையாகும்
தருணத்தில்....
தாடி குத்துகிறது போ!
என்று ஓடி மறைந்தாய்.
தாடி மறைய வைத்தியமும் இல்லை
தாயாகி மகிழ சாத்தியமுமில்லை.
கண்மணி வா! என்று
பயித்தியமாய்
மீண்டும் நான்.
~~~~~~~~~~~~~~~~~
காலத்துள் நான்
காலமாகிவிட்டார் எனும் போது
கை நழுவி விட்டார் என்று பொருள்
உள்ளங்கைத் தண்ணீராய் நழுவி
ஓடுகிறது காலம்
உன்னோடு ஒட்டச் சொல்லி
வந்து வந்து நிற்கிறாய் கனவில்
யயாதி போல் காலத்தை
மீடுத்தரவல்லவொரு பிள்ளை
பெற்றேன் இல்லை நான்
காலத்தின் ஓட்டத்தில் கைகோர்த்து
களைத்து பின் காலமாகிவிடுதல் போலும்
ஆனாலும்..
காலம் என் கைவசம்தான்
என்றேன். நீ புன்னகைத்தாய்
உன்னை நான் இப்போது
உணர்தல் போலும்
காலத்தையும் உணர்கின்றேன் காண்
என் புணர்ச்சியின்றி
காலம் இல்லை காரிகையே!
உன் கைக்குள்
நானில்லை ஆனால்
உன் காலத்துள் நான்.
~~~~~~~~~~~~~~~~~~~~
அதேநான்
வந்தது சூரியன்
புலர்ந்தது காலை
இன்னொரு காலை
இதே சூரியன்
அதே நான்
அதே அலுப்புடன்
மோட்டிலிருந்த என்
கண் கடற்கரைக்குத்
தாவியபோது
அதே அழுக்குப்பிடித்த
பாவாடை, மூக்குவழியும் சிறுமி
தினம் தேடுகிறாள்
மண்ணுள் குடைந்து
அலுக்காமல் சலிக்காமல்
அதே கரை, அதே சிறுமி
அடுத்த நாளுள்
பிரவேசிக்கும்
அதே நான்.
~~~~~~~~~~~~~~~



0மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு