தேடிச் சொல்

என்ன அப்படிப் பார்க்கிறாய்?
இடைப்பட்ட நேரத்தில்
நம் உலகங்கள் மாறிவிட்டன.
பாதி நீ சிருஷ்டித்தது மீதி நான்.
உலகங்களை உருவாக்குவதொன்றும்
பிரம்மப்பிரயர்த்தனமல்ல.
குழந்தையில் உருவாக்கிய உலகங்களை
பிற குழந்தைகளுக்கு விட்டுவிட்டு பின்
கூட்டுப்புழுவாகி வேறொரு உலகில்
சஞ்சாரித்து...ஆங்!
அங்குதான் உன்னைச் சந்தித்தேன்.
கலந்தோம் களிப்புற்றோம்
காலங்கள் பறந்தோடி
வேறொரு உலகில் மீண்டும்
சந்திக்கிறோம்.
இடையில் தோன்றிய என்னுலகு
நீ அறியாய், உன்னுலகு நானறியேன்.
உலகிற்குள் உலகென்று ஒவ்வொரு
நொடியும் உருவாக்கி..உருவாக்கி
இன்னும் அயராமல் உருவாக்க முயல்கிறோம்.
நீ கண்ட நான் இன்னும் ஒரு உலகில்
புதையுண்டு போயிருக்கலாம்
அதை நீதான் கண்டெடுக்க வேண்டும்.
புதையுண்ட என் நீ எங்கிருக்கிறாய்
என்பதே என் தேடலும்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புதியதோர் ஜென்மம் புதியதோர் கிரணம்
அந்த ஒளியில் நாம் தென்படுகிறோமா
என தேடிச் சொல்!

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு